திருப்பூர், ஜன. 19: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரியில் இருந்து மத்திய அரசின் ‘பிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். இதில், மாணவ செயலர் சந்தோஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி கல்லூரியில் துவங்கி புஷ்பா தியோட்டர் வழியாக டவுன்ஹால், எம்..ஜி.ஆர்.சிலை, பார்க் ரோடு, நஞ்சப்பா பள்ளி, ரயில் நிலையம், புஷ்பா தியோட்டர் வழியாக மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில், எம்.எல்.ஏ. குணசேகரன், வடக்கு உதவி போலீஸ் கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோரும் சைக்கிள் ஓட்டியபடி பங்கேற்றனர்.
பேரணியின் போது, மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், கோஷம் போட்டும் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் தீபா செய்திருந்தார்.