×

திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

கோவை, ஜன.19: கோவையில் திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.கோவை பீளமேட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (42). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் மனைவியான 25 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டாக அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயகுமார் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அங்கு உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அந்தப் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் டார்ச்சர் செய்துள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் அந்தப் பெண்ணை பிடித்து கீழே தள்ளினார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்