கோவை, ஜன.19: கோவை கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ரூ.1.7 லட்சம் பணம் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.கோவை கரும்புக்கடை ரமலான் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் ரோஷன் அஷ்ரப் (44). இவர் கடைவீதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தார். அதி்ல் கடையில் சில வருடங்களாக வேலை பார்த்து வரும் கோவில்பட்டியை சேர்ந்த நித்தின்(27) என்பவர் கடையில் இருந்து அடிக்கடி பணத்தை திருடியது பதிவாகியிருந்தது. இது குறித்து ஊழியர் நித்தினிடம் அஷ்ரப் கேட்டபோது தான் பணத்தை திருடவில்லை என்று கூறி வேலையை விட்டு சென்றுவிட்டார்.
இதனையடுத்து ரோசன்அஷ்ரப் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நித்தின் ரூ. 1.7 லட்சம் பணம் திருடியதும், அந்த பணத்தில் நகை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கடைவீதி போலீசார் அவரை கைது செய்தனர்.