தள்ளுவண்டி கடைக்காரர், மனைவி மீது தாக்குதல்

புதுச்சேரி, ஜன. 19:  புதுவை சின்னவீராம்பட்டினம், திருவிக வீதியில் வசிப்பவர் முத்தையன் (40). இவர் அங்குள்ள பீச்சில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு முத்தையன் கடை போட்டிருந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனத்தின் காவல் மேற்பார்வையாளராக பணிபுரியும் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடையை ஒதுக்குப்புறமான இடத்தில் போடுமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்தையன், சுவாதியை திட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை தனது தந்தை நாகமுத்துவிடம் அவர் தெரிவிக்கவே, அவர் தனது சகோதரரான ஜெகனை அழைத்துக்கொண்டு அங்கு வந்துள்ளார். பின்னர் முத்தையனை திட்டி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, முத்தையன் மனைவியையும் பிளாஸ்டிக் சேரால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் முத்தையன் புகார் அளித்தார். எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், நாகமுத்து மற்றும் ஜெகன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: