×

மாவட்டம் முழுவதும் இன்று 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கிருஷ்ணகிரி, ஜன.19:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (19ம்தேதி) 984 மையங்களில் 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று (19ம்தேதி) நடைபெறும் முகாமில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 597 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 900 மையங்களிலும், 2 நகர் பகுதியில் 84 மையங்களிலும் என மொத்தம் 984 மையங்களில் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, வேறு இடங்களில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோர்களுக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து மையங்களுக்கு விநியோகம் செய்வதற்காக பிற துறை வாகனங்கள் 37 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் 53 வாகனங்கள் உள்பட 90 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க சுகாதார துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 77 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலியோ சொட்டு மருந்து மையங்களை மேற்பார்வையிட மண்டல குழு மற்றும் துறை சார்ந்த 27 அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு சத்துணவு மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும்  ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் டோல்கேட்டில் இடைவிடாமல் வழங்கப்பட உள்ளது. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து போட்டு இருந்தாலும் இன்று (19ம்தேதி) மீண்டும் போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...