திருச்சி, ஜன. 19: மணப்பாறை அடுத்த கவரப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார்(25). இவர் மலேசியாவில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு சென்னையை சேர்ந்த பர்வீன்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் பர்வீனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருவரின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் இந்தியா திரும்பினர். தொடர்ந்து குடும்பத்தினருக்கு தெரியாமல் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பர்வீனுடன் வினோத்குமார் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் வினோத்குமாருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தாய் தமிழரசி முடிவு எடுத்து திவ்யபாரதி என்பவருடன் நிச்சயம் செய்தார்.