திருச்சி, ஜன.19: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர்களின் ஒப்புதல் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் துவங்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த திட்டம். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் 3,994 ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் முசிறி, மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர், துறையூர் ஆகிய ஜந்து வட்டாரங்களில் 135 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது. முதற்கட்ட வட்டாரமான முசிறி வட்டாரத்தில் திட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியன முக்கிய நோக்கமாகும்.சுய உதவிக்குழு குடும்பங்கள் பயனாளிகள் ஆவர். பெண்கள், இளைஞர், ஆர்வம் உள்ள தொழில் முனைவோர், முதல் தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பழங்குடியினர் ஆதிதிராவிடர் ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்க அனைத்துதுறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மற்றும் தகுதியான தனிநபர் பயனாளிகளையும், தொழில் கூட்டமைப்புகளையும் தேர்வு செய்து திட்ட பயன்கள் வழங்கப்பட வேண்டும்’ என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட திட்ட செயல் அலுவலர் சுதாதேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவிந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.