திருமங்கலம், ஜன.19: பாஸ்டேக் கட்டணமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பொங்கல் கொண்டாடி சொந்த ஊருக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் பாஸ்டேக் கட்டண முறை கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் கப்பலூர், எலியார்பத்தி உள்ளிட்ட மூன்று டோல்கேட்டுகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிக போக்குவரத்து கொண்ட கன்னியாகுமரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டணத்தால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கப்பலூர் டோல்கேட்டில் மொத்தமுள்ள 10 கவுன்டர்களில் 1 மற்றும் 2, 9 மற்றும் 10 கவுன்டர்கள் பணம் கட்டிசெல்லும் கவுன்டர்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமள்ள 6 கவுன்டர்களும் பாஸ்டேக் கட்டண கவுன்டர்களாக அமைக்கப்பட்டுள்ளன. பாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டும் இதுவரையில் பாதிக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பாஸ்டேக் ஸ்டிக்கர் எடுக்கவில்லை. இதனால் கட்டண கவுன்டர்களில் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக கப்பலூர் டோல்கேட்டில் கட்டண கவுன்டர்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. பாஸ்டேக் எடுக்காமல் பாஸ்டேக் கவுன்டர்களில் சென்றால் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதால் கட்டண கவுன்டர்களில் ஏராளமான வாகனங்கள் செல்லவேண்டியுள்ளது.