போலீசை தாக்கிய 4 வாலிபர்கள் மீது வழக்கு

மதுரை, ஜன. 19:  மதுரையில் போலீசை தாக்கிய 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர் கடந்த 17ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு சீருடையுடன் தனது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து, சம்மட்டிபுரம் புறக்காவல்நிலைத்திற்கு சென்றார். சம்மட்டிபுரம் மெயின் ரோடு பாரதியார் நகர் பகுதியில் 4 பேர் கும்பல் நடுரோட்டில் நின்று கொண்டு அசிங்கமாக பேசி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக தெரிகிறது. இவர்களை கலைந்து செல்லுமாறு சிவக்குமார் கூறியுள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றி, 4 பேரும் சிவக்குமாரை டூவீலரில் இருந்து கீழே தள்ளி, சரமாரியாக தாக்கியதுடன், ஹெல்மெட்டையும் கத்தியால் வெட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பியதாகவும், எஸ்.எஸ்.காலனி போலீசில் சிவக்குமார் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவர்கள், சம்மட்டிபுரம் மணிகண்டன்(22), ரஞ்சித்(20), சொக்கலிங்கநகர் ஜோதி(21), ராஜ்நகர் கார்த்திக்(23) ஆகிய 4 பேர் என தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.    

Related Stories: