×

வரும் 31ம் தேதிக்குள் தொழிலாளர் நல நிதி செலுத்துவது கட்டாயம்

வேலூர், ஜன.14: வரும் 31ம் தேதிக்குள் தொழிலாளர் நல நிதி செலுத்துவது கட்டாயம் என்று வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972ன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நல நிதிச் சட்டம் பிரிவு 2(டி)ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக 10ம், ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ₹20ம் சேர்த்து மொத்தம் ₹30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2019ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 31ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972 பிரிவு 15ன் படி அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த கடமைப்பட்டவராவார். எனவே, 2019ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை வரும் 31ம் தேதிக்கு முன்பாக ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006’ என்ற முகவரிக்கு ‘The Secretary, Tamil Nadu Labour Welfare Board, Chennai- 600 006’ என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...