விருதுநகர், ஜன. 14: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இளம் வாக்காளர்களை சேர்க்க ஜன.22ல் முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கத்திருத்தம் குறித்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வாக்காளர் பட்டியல் மாவட்ட பார்வையாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் பேசுகையில், ‘கடந்த டிச.23ல் வெளியான வரைவு வாக்களர் பட்டியலில்படி 15,90,198 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தற்போது இறந்த, இடம் பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களை கண்டறிந்து பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது உரிய நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம், வயது, முகவரி உள்ளிட்ட தகவல்கள் தவறாக இடம்பெற்றிருந்தால் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜன.22ல் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யலாம்’ என தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.