ஊத்துக்கோட்டை, ஜன. 14: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக மற்றும் பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊத்துக்கோட்டை பேரூராட்சி அண்ணாநகர் பகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மகளிரணி நிர்வாகி சாந்தி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து, ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏவும், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைச்செயலாளர் சி.எச்.சேகர் 400 குடும்பங்களுக்கு பொங்கல் பெருட்களான அரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, ஏலக்காய், முந்திரி ஆகியவைகளை வழங்கினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் ரவிச்சந்திரபாபு தலைமையில் ஊழியர்கள் பேரூராட்சி வளாகத்தில் வண்ணகோலமிட்டு பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
இதேபோல், ஊத்துக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். மேலும், கோதண்டராமன் அரசு நிதி பெறும் பள்ளியில் போகி பண்டிகையில் பிளாஸ்டிக் எரிக்க கூடாது, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.