புதுச்சேரி, ஜன. 14: புதுவை பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோப்பு தயாரான நிலையில் அதை ஏற்க மறுக்கும் அவர்கள், தங்களை தினக்கூலியாக பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வரை அவர்கள் மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்கள் தங்களை முழுநேர தினக்கூலியாக மாற்ற வேண்டும், மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி வாட்டர் டேங்க் மீது ஏறி தர்ணா உள்ளிட்ட பலகட்ட போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அமைச்சரவை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இதனிடையே அதிகாரிகள் தரப்பில், வவுச்சர் ஊழியர்களான 1311 பேருக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.200ல் இருந்து ரூ.420ஆக அதிகரித்து கோப்பு தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பியது.
இதுகுறித்த தகவல் கிடைக்கவே அதிர்ச்சியடைந்த வவுச்சர் ஊழியர்கள் சங்கத்தினர், தலைவர் சரவணன் தலைமையில் முதல்வரை சந்தித்து முறையிட நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் முதல்வர் நாராயணசாமி டெல்லி சென்றுவிட்டதாக தகவல் கிடைக்கவே அங்கிருந்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் வந்தனர். அங்கிருந்த அதிகாரியை சந்தித்து ஊதிய உயர்வுக்கு பதிலாக, முதலில் தங்களை தினக்கூலி ஊழியராக மாற்றி உத்தரவு பிறப்பித்து அதன்பிறகு சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இந்த முடிவை தங்களால் எடுக்க முடியாது என அதிகாரி கைவிரித்த நிலையில் மீண்டும் முதல்வரை சந்தித்து முறையிட வவுச்சர் ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்காவிடில் பொங்கல் முடிந்ததும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுடன் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்துடன் முற்றுகையில் ஈடுபட ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக சங்க தலைவர் சரவணன் கூறுகையில், தங்களது பிரதான கோரிக்கையே வவுச்சரை தினக்கூலியாக மாற்றுவதுதான். எனவே இதை முதலில் நடைமுறைப்படுத்தி சம்பள உயர்வை அரசு வழங்க வேண்டும் என்றார்.