திருவெண்ணெய்நல்லூர், ஜன. 14: திருவெண்ணெய்நல்லூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தல் முகாமை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் நடந்தது. இதில் 18வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல், முன்னதாக தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர், முகவரி ஆகியவை பிழையாக அச்சிடப்பட்டிருந்தால் அவற்றை உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து திருத்தம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது.
இந்த முகாமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திட்ட இயக்குனர் மகேந்திரன், வட்டாட்சியர் வேல்முருகன், மண்டல துணை வட்டாட்சியர் மகாதேவன், வருவாய் ஆய்வாளர் பரணி, கிராம நிர்வாக அலுவலர்கள் அப்துல் சலாம், பாரதிராஜா மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அங்கு நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.