தூத்துக்குடி, ஜன.14: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் வருவாய்த்துறை பெண் ஊழியர்கள் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு தாசில்தார் செல்வகுமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தாமஸ் பயஸ் முன்னிலை வகித்தார். வருவாய்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இவ்விழாவில் மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கலிட்டனர். தொடர்ந்து ஊழியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.