×

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சியில் பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன.14: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் வருவாய்த்துறை பெண் ஊழியர்கள் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு தாசில்தார் செல்வகுமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தாமஸ் பயஸ் முன்னிலை வகித்தார். வருவாய்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இவ்விழாவில் மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கலிட்டனர். தொடர்ந்து ஊழியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.  இவ்விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வங்கியின் இயக்குநர் அசோக், துணைத்தலைவர், வங்கியின் பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக்கோலங்களிட்டு பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். விழாவினை முன்னிட்டு கண்கவர் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

Tags : Pongal Festival ,Office ,Tuticorin Collector ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா