ஊட்டி, ஜன. 14:நாளை மறுநாள் ெபாங்கல் பண்டிகை துவங்கும் நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், பூளைப்பூ, மண் பானை போன்ற பொருட்கள் நீலகிரிக்கு வந்தன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை விவசாயிகள், பொதுமக்கள் கொண்டாடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவிய நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பொங்கல் பண்டிகையை விமர்சியாக கொண்டாடவில்லை. பெரும்பாலான விவசாயிகள் எளிமையாக கொண்டாடினர். இம்முறை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மட்டுமின்றி, மலை காய்கறி விவசாயமும் செழிப்புடன் காணப்படுகிறது. அதேசமயம், பெரும்பாலான காய்கறிகளுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு பின் இம்முறை விவசாயிகள் முகத்தில் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. நாளை பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், கரும்பு, மஞ்சள், பூளைப்பூ, மண் பானைகள் போன்றவை சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று வந்து சேர்ந்தன. இப்பொருட்கள் நீலகிரியில் விளையாத நிலையில், ஆண்டு தோறும் சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வருவது வழக்கம். ஊட்டி மார்க்கெட்டிற்கு கரும்பு, மஞ்சள், வாழை, பூளைப்பூ ஆகியன வந்து சேர்ந்தன. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். அதேபோல், மாட்டு பொங்கலையொட்டி திருஷ்டி கயிறுகள், மூக்கு கயிறுகள் ஆகியனவும் அதிகளவு விற்னைக்கு வந்துள்ளன.