ஊட்டி, ஜன. 14:அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரமூலா பழங்குடியின கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். பந்தலூர் அடுத்த நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காரமூலா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி ஊட்டியில் நேற்று கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரமூலா பழங்குடியின கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு பாதை வசதி இல்லை. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், நோயாளிகளை மருத்துவனைக்கு அழைத்து செல்லவும் மிகவும் சிரமமடைந்து வந்ேதாம். சாலை அமைத்து தர கோரி பல முறை கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்படும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையை பயன்படுத்த பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தரமான தார் சாலை அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்புச்சுவர் கட்டி தர வேண்டும். மேலும் எங்கள் கிராம மக்களுக்கு இதுவரை எந்த விதமான அரசின் திட்டங்கள் வந்து சேரவில்லை. சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை போன்றவைகளும் கிடைப்பதில்லை. எனவே அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.