×

காற்று மாசுவை கட்டுப்படுத்த டயர்களை எரிக்க வேண்டாம்

கோவை, ஜன. 14:கோவை மாவட்டத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் போகி பண்டிகையொட்டி வீடுகள், பொதுஇடங்களில் டயர்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. போகியின் போது பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இதன் காரணமாக அதிகளவிலான காற்று மாசு ஏற்படுகிறது. இந்நிலையில், போகி பண்டிகையின் காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை, கோவையில் இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது.  
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ரமேஷ், வெங்கடசாலம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போகி பண்டிகை என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாகும். மனதையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்குவது.

ஆனால், இன்றைய தலைமுறையினர் போகியை வேறு விதமாக அணுகுகின்றனர். டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீடுகள், பொது இடங்களில் எரிக்கின்றனர். இதில் இருந்து நச்சு வாயுகள் வெளியாகிறது. இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குறைமாத பிரசவத்திற்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2018ல் விமானநிலையங்களில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக  போகியன்று காற்றுமாசு குறைந்தது. விமானங்கள் தரையிறங்குவதில் தடையில்லாமல் இருந்தது. காற்றுமாசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகளை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார். அப்போது, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கார்த்திக் பிரபு, டாக்டர் துரை கண்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை