குடியரசு தின ஆலோசனை கூட்டம்

ஈரோடு, ஜன.14: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஜன.26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், கலெக்டர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ள உள்ளார்.இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு துறைகளிலும் நலத்திட்டங்கள் வழங்குவதற்காக பயனாளிகளை முறையாக தேர்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.மேலும், பொதுமக்கள் குடியரசு தினவிழாவை கண்டுகளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தினேஷ், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: