திருச்சி, ஜன.14: திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 20ம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 14ம் தேதி வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருக்கிறார்.