திருச்சி, ஜன.14: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகர் தில்லைநகரில் ரூ.15 கோடியில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு வாடகைக்கு விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டம் வார்டு எண்.56க்குட்பட்ட தில்லைநகர் 7வது குறுக்கு சாலையில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வணிக வளாகம் 30698.28 சதுரஅடி இடப்பரப்பில் கீழ்வரும் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரை கீழ் தளம், தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் என மொத்தம் 50275.34 ச.அடிக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு தளமாகவோ வாடகைக்கு எடுக்க விரும்பும் அரசுதுறைகள், தனியார் வணிக நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.