ராட்சத அலையில் சிக்கி மாணவன் உள்பட 2 பேர் சாவு

வேளச்சேரி: மன்னார்குடியை சேர்ந்தவர் நரசிம்மா (22). பி.இ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னை வந்தார். தேர்வு முடிந்தவுடன், செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படிக்கும் தனது உறவினர் கோகுல் (22), அவரது நண்பர்கள் அரவிந்தசாமி (25), அருண்குமார் (28) ஆகியோருடன் பெசன்ட் நகர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார். அங்கு, அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி நரசிம்மா மற்றும் கோகுல் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து, அங்கிருந்த சிலர் ஓடிவந்து நரசிம்மாவை மயக்க நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், கோகுல் மாயமானார். அவரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, நரசிம்மாவை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரசிம்மா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரிக்கின்றனர்.

மாயமான கோகுலை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:  கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (15). மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் இச்சிறுவன் தனது 4 நண்பர்களுடன் கானத்தூர் கடற்கரைக்கு சென்று குளித்துள்ளான். அப்போது ராட்சத அலையில் சிக்கி முகமது இஸ்மாயில் கடலில் மூழ்கினான். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவ கிராம மக்கள், முகமது இஸ்மாயிலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை முகமது இஸ்மாயில் சடலம் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: