வாணியம்பாடி, ஜன.13: இளைஞர் அதிகளவில் சைக்கிள் போட்டியில் பங்கேற்பதை வலியுறுத்தி 600 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தில் வாணியம்பாடிக்கு ேநற்று ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வந்தார். இளைஞர்கள் அதிகளவில் சைக்கிள் போட்டியில் பங்கேற்பதை வலியுறுத்தி சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் தொடர் சைக்கிள் பயணக்குழு சார்பில் தொடங்கியது. இந்த பயணத்தில் சென்னையிலிருந்து 80 பயணக்குழு வீரர்கள் சைக்கிளில் வேலூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி வந்தடைந்தனர். இதில் ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உடன் வந்தார். அவரை எஸ்பி விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வரவேற்றனர் .
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தொடர் சைக்கிள் பயணக்குழுவின் கேப்டன் சுந்தர் பேசுகையில்,` இந்த சைக்கிள் பயணம் சென்னையில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக தொடர்ந்து 600 கிலோமீட்டர் சென்று சென்னைக்கு திரும்பும் தொடர் சைக்கிள் பயணம். இதில் 80 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதில், ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு 200 கிலோ மீட்டர் வரை சைக்கிள் பயணம் எங்களுடன் மேற்கொண்டு பயணித்தார். இந்த தொடர் பயணங்கள் முடிந்த பிறகு சைக்கிள் வீரர்களுக்கு இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார். பின்னர் ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு கூறுகையில், `இளைஞர்கள் இந்த சைக்கிள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சைக்கிள் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது. என்றார். பின்னர் தொடர் பயணத்தை மேற்கொண்ட சைலேந்திரபாபு நாளை காலை 6 மணிக்கு சென்னையில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாக தெரிவித்தார்.