திருப்பத்தூர் அருகே கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பத்தூர், ஜன.13: திருப்பத்தூர் அருகே கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த சித்திரமேழி கல்வெட்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.  திருப்பத்தூர் தனியார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, மாணவர்கள் பொ.சரவணன், ப.தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழமையான ‘சித்திரமேழி’ கல்வெட்டினைக் கண்டறிந்தனர். இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் களப்பணி மேற்கொண்டபோது கல்நார்சாம்பட்டி மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து அக்கல்லினைச் சுத்தம் செய்து பார்த்ததில் அது பழமையான ‘சித்திரமேழி’ கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. ‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரமாகப் பொரிக்கப்பட்டிருக்கும் உழவுக்கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவிற்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது.

கல்வெட்டின் அமைப்பு: கல்நார்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் பூமாதேவி (தமிழில் நிலமகள்) தலையில் கிரீடத்துடன் அமர்ந்த நிலையில் தம் இரு கைகளிலும் மலர்ச்செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். அவரது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும் அதன் மேல் கும்பக் கலசமும் வடிக்கட்டுள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும் கண்ணாடியும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்லானது 3அடி அகலமும் 2 ½ உயரமும் கொண்டதாக உள்ளது. வணிகக்குழுக்கள் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை'''' என்று அழைக்கப்படும். இடைக்காலத் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியர் என்ற பட்டு வணிகர்கள், நாட்டுச்செட்டி போன்றோர் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியர், திருப்பத்தூர் பகுதியில் ஐநூற்றுவர் ஆகிய வணிகப் பிரிவினர்கள் குறித்துக் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. கி.பி. 8 முதல் 13ம் நூற்றாண்டு வரை இருந்த இவ்வணிகக் குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இவர்கள் தங்களைப் பூமி புத்திரர் என்று அழைத்துக் கொண்டனர். எட்டுத் திசைகளிலும் வணிகம் செய்த தென்னிந்திய வணிக குழுக்கள் மட்டுமே அரசர்களைப் போல தங்களுக்கென ஒரு படையை வைத்துக்கொள்ளவும், ஊர் பஞ்சாயத்து செய்யவும், தனியாகக் கல்வெட்டுக்கள் பொறித்துக்கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனர். கல்நார்சாம்பட்டி மக்கள் பொங்கள் பண்டிகையின் போது ‘காணும் பொங்கள்’ அன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்துவந்து இவ்விடத்தில் கட்டி வைத்து பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன் கிழமையன்று ஏர்பூட்டி தங்கள் நிலத்தில் உழுது, முளைக்கட்டிய நவதானியங்களைத் தூவி வழிபடுகின்றனர். இவ்வழக்கமானது பண்டைக் காலத்தில் ‘பொன்னேர்’ பூட்டி உழும் சடங்கினை நினைவூட்டுவதாக உள்ளது.

பொன்னேர் உழுதல் என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும். இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறியலாம். இதை இளங்கோவடிகள் ‘ஏர்மங்கலம்’ எனக் குறிப்பிடுகிறார். முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். தாய்லாந்து, கம்போடியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் இன்றளவும் இந்நிகழ்வு நடைெபறுகிறது.

கல்நார்சாம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ள இவ்வணிகக் குழுக் கல்வெட்டானது கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னாள் தொல்லியல்துறை உதவி இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன் அவர்கள் உறுதிசெய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: