×

தேவஸ்தான டிவி பெண் ஊழியரிடம், நடிகர் காதல் உரையாடல் ஆன்மிக தொலைக்காட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்

திருமலை, ஜன.13: திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம், காதல் உரையாடலில் ஈடுபட்ட தொலைக்காட்சி தலைவர் பிரித்திவிராஜை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜெகன்மோகன் அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தனக்கு வேண்டியவர்கள் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, 30 பேரை கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவருடன் பிரித்திவிராஜ் பணியில் இருந்தபோது பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், பெண் ஊழியரிடம் நீ என் இதயத்தில் இருக்கிறாய், ஐ லவ் யூ என்றும், மது அருந்துவதை நிறுத்தி இருப்பதாகவும், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போது தான் என்று பேசியதோடு, தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்ததாகவும், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற அச்சத்தில் செய்யவில்லை என்றும் காமெடி நடிகரும், தொலைக்கட்சியின் தலைவருமான பிரித்திவிராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ 5 நிமிடம் ஓடுகிறது. பெண் ஊழியருடன் பிரித்திவிராஜ் காதல் ஆடியோ வெளியாகிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் பிரித்திவிராஜை உடனடியாக தொலைக்காட்சியில் தலைவராக தொடர்ந்து இருக்கக்கூடாது. உடனடியாக அரசு பிரித்திவிராஜை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் போது தேவஸ்தான தொலைக்காட்சியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அன்னமய்யா, கண்டசாலா போன்றவர்களை போன்று மெக்கப் செய்து கொண்டு பெருமாள் முன்பு பாடல் பாடுவது போன்று நடித்து அதனை தேவஸ்தான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தார். இந்த காட்சிகளும் பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கியது. பிரமோற்சவத்தில் சுவாமியை காண்பதற்காக தொலைக்காட்சியை வைத்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பிரித்திவிராஜ் வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதே போன்று கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் செய்து வரும் போராட்டம் குறித்து, பிரித்திவிராஜ் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத வகையில் அமராவதியில் உள்ள விவசாயிகள் லெனின் ஆடைகள் அணிவதாகவும், ஆடி காரில் வருவதாகவும், அமராவதிக்கு போராடக்கூடியவர்கள் சினிமா நடிகர்களை வைத்துக் கொண்டு போராட்டம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அமராவதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், முதல்வர் ஜெகன்மோகனும் கண்டித்தார். இதையடுத்து பிரித்திவிராஜ் தான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதாக விளக்கமளித்தார். இந்நிலையில் பெண் ஊழியரிடம் காதல் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Devasthna TV ,TV leader ,
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...