சேலத்தில் வெவ்வேறு இடத்தில் 2 மாத கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் தற்கொலை

சேலம், ஜன.13: சேலத்தில் வெவ்வேறு இடத்தில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். சேலம் தாசநாயக்கன்பட்டி 8வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(25). இவர், கடந்த 4 மாதத்திற்கு முன் தனியார் கல்லூரியில் பி.காம்., 3ம் ஆண்டு படித்து வந்த கீர்த்தனா (19) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 மாத கர்ப்பிணியாக கீர்த்தனா இருந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதனால், மன வேதனையில் இருந்த கீர்த்தனா, நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், பழையசூரமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி தீபிகா (22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குடும்பத்தகராறில் நேற்று, தீபிகா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி மீனா (28). இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் கணவரை பிரிந்து, கோரிமேடு கொல்லப்பட்டிபுதூரில் உள்ள தாய் ஈஸ்வரி வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கு வசித்து வந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டை தாய்மாமா உரிமை கொண்டாடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று வீட்டில் வந்து தகராறு செய்துள்ளார். இதனால், வசிக்க வீடு இல்லையே என வேதனையடைந்த மீனா, வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: