மேலூர், ஜன. 13:மாதந்தோறும் ஒரு நாள் மின்தடையை ஏற்படுத்தி விட்டு நகர் முழுவதும் ஆய்வு செய்யும் மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரிலேயே வளர்ந்துள்ள செடியை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாதந்தேறும் ஒவ்வொரு பகுதியாக ஒரு நாள் மின்தடை அறிவிப்பு வெளியிடும் மின்வாரியம், அன்றைய தினத்தில் தடை ஏற்பட்டுள்ள பகுதியில் மின்வயர்களில் படரும் செடி, கொடி, மரக்கிளைகளை ஊழியர்களை கொண்டு அகற்றவது வழக்கம். இவற்றை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்படி சுத்தம் செய்யப்படும் போது தடையின்றி மின் சப்ளை பொதுமக்களுக்கு கிடைக்கும்.
ஆனால் மின்தடை அன்று ஊழியர்களுடன் எந்த அதிகாரிகளும் செல்வது கிடையாது. இதனால் பெயரளவிற்கு ஊழியர்கள் வேலை பார்த்து விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பல இடங்களில் மின்வயர்களில் மரக்கிளைகள் உரசியபடியே நிற்கிறது. இது குறித்து ஊழியர்களிடம் கேட்டால், போதிய ஊழியர்களை மின்வாரியம் நியமிக்கவில்லை என்றும், தினசரி கூலிக்கு அன்றைக்கு மட்டும் சிலரை அழைத்து வேலை வாங்குவதாகவும் தெரிவித்தனர். மேலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளநாதன்பட்டியில் உள்ள வீரசூடாமணி கண்மாய்கரையில் உள்ள டிரான்ஸ்பார்மரிலேயே கொடிகள் படர்ந்து, அடர்ந்து உள்ளதே இவர்களின் பணிக்கு ஒரு சான்று. மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா ?