மதுரை, ஜன. 13: மதுரை மாவட்டத்தில் பழைய பொருட்களை எரிக்காமல் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கலெக்டர் வினய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தைப்பொங்கலுக்கு முந்தையநாளை போகிப் பண்டிகையாக ‘பழையன கழிதலும், புதியன புகுதலுமாக’ கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் தமிழர்கள் தை திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாளுகிறோம். இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால், ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன், மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன்மூலம் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், பார்வைத்திறன் குறைவு மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படும்.