விழுப்புரம், ஜன. 13: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தால் காவல்துறையில் காலியாக உள்ள சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் ஆகிய பிரிவில் 969 எஸ்.ஐக்கள் பணியிடம் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த பொதுப்பிரிவினருக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 1,168 பெண்கள் உள்ளிட்ட 7,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி, அரசூர் விஆர்எஸ் பொறியியல் கல்லூரி, விஆர்பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 326 பெண்கள், 1,241 ஆண்கள் உள்ளிட்ட 1,567 பேர் கலந்து கொள்ளவில்லை. 5,514 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டு எழுதினர்.