கடலூர், ஜன. 13: தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாநில பிரசார செயலர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பானுமதி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஜெயலட்சுமி விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கிராம சுகாதார செவிலியரின் பிரதான பணியான தாய்சேய் நலப்பணியை செய்ய அனுமதிக்க வேண்டும். குறுகிய காலத்தில் அவசர அவசரமாக அறிக்கைகள் கேட்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய நிதிபலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் மதி நன்றி கூறினார்.