புதுச்சேரி, ஜன. 10: புதுவை சுதேசி நுழைவு வாயில் முன்பு ஆலை மட்ட தொழிற்சங்க தலைவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர். சுதேசி மற்றும் பாரதி மில் தொழிலாளர்களுக்கு 12 மாத நிலுவை சம்பளம் மற்றும் 2 ஆண்டு போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும், பஞ்சு வாங்கி கொடுத்து உடனடியாக மில்களை இயக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலைமட்ட தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று சுதேசி மில் நுழைவு வாயில் முன்பு பஞ்சாலை அனைத்து தொழிற்சங்கத்தலைவர் அபிஷேகம் தலைமையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடங்கினர். உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். சிஐடியு முருகன், லெனினிஸ்ட் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.