விழுப்புரம், ஜன. 10: மாவட்டதொழில் மையம் சார்பில் இளைஞர்கள் தொழில்தொடங்க மானியத்துடன் கடனுதவிக்கான நேர்காணல் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு 3 விதமான சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ், தொழில் தொடங்கிட தகுதி வாய்ந்த நபர்களுக்கு, மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில், உற்பத்தித் தொடர்பான தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், உற்பத்தித் தொடர்பான தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.