தஞ்சை, டிச. 16: இந்திய சுற்றுலாத்துறை மற்றும் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள இந்திய சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி கல்லூரி சார்பில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. இந்த பிரசாரம் கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, திருவாரூர் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 9வது இடமாக தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. விழிப்புணர்வு பிரசாரத்தை ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி மாணவருமான ஜெயக்குமார் தலைமையில் உதவியாளர்கள் பாஷா, சுரேந்தர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.