திண்டிவனம், டிச. 16: திண்டிவனம் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது.இதனால் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாமலும், குழந்தைகள் தெருக்களில் விளையாட முடியாமலும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் பிரகாஷ்
உத்தரவின்பேரில் பாரதி வீதி, நேரு வீதி, செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் கூறுகையில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து பிடிக்கும் பகுதியிலேயே மறுபடியும் விடப்படும் எனவும், இதனால் நாய்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.