சாலை, தெருவிளக்கு சீரமைக்க கோரி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: சாலை, தெருவிளக்கு சீரமைக்கக் கோரி திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதி மக்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவொற்றியூர், விம்கோ நகரில் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் தெருவிளக்கு இல்லாததால் நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதன் காரணமாக இவ்வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவிளக்கு மற்றும் பழுதான சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: