×

தொட்டியம் அருகே பரபரப்பு

தொட்டியம், டிச.13: தொட்டியம் அருகே கூன்ராக்கம்பட்டி கிராமத்தில் மயானத்து பாதையை சீரமைத்து தர வலியுறுத்தி சடலத்துடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியம் தாலுகா, நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கூன்ராக்கம்பட்டி, குட்டைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏவூரி(80), வயது முதிர்வு காரணமாக இறந்து போனார். இதையடுத்து உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஏவூரி உடலை அடக்கம் செய்வதற்காக தூக்கி வந்துள்ளனர்.
அப்போது அன்மையில் பெய்த மழை காரணமாக ஏற்கனவே மோசமாக இருந்த சாலை தற்போது முற்றிலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொட்டியத்தில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் கூன்ராக்கம்பட்டி என்ற இடத்தில் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சாலையை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் ஏவூரி உடலை அடக்கம் செய்வதற்காக தூக்கிச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Thottiyam ,
× RELATED தா.பேட்டை, தொட்டியம் பகுதியில்...