திருச்சி, டிச.13: திருச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வின்போது பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் மெத்தனம் காட்டிய மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளருக்கு அபராதம் விதித்து, வேறு ேகாட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைவிதித்து கடுமையான சோதனைகளை நடத்தி அவ்வப்போது அபராதம் விதித்து வருகிறது. மேலும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அவ்வப்போது மாநகராட்சி பணியாளர்களை அழைத்து கூட்டம் போட்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதில் துப்புரவு மேற்பார்வையாளர்களும் அடங்குவார்கள்.