ராஜபாளையம், டிச. 13: ராஜபாளையம் நகர் பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். ராஜபாளையம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி சாலை என செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சரிசெய்து வந்த நிலையில், நகராட்சி சாலைகளில் இதுவரை எந்த ஒரு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முக்கிய சாலைகளில் அதிக வாகனங்கள் சென்று வரும் நேரங்களில் சாலைகளில் அதிகளவு தூசிகள் கிளம்புவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் டூவீலரில் செல்வோர் மேடு, பள்ளம் தெரியாமல் தடுமாறி விழுவதால் உயிரிபலி ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து நகர் பொதுமக்கள் கூறுகையில், நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை பல ஆண்டுகளாக சரி செய்யாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய முக்கிய நகராட்சி சாலைகளை மட்டுமாவது செப்பனிட வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை உடனடியாக சரி செய்து பொதுமக்களின் இன்னலை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.