×

உள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 831 பேர் வேட்புமனு தாக்கல்

சேலம், டிச.13: சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட 4வது நாளில் 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும் 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில், 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4,299 பதவிகளுக்கு, வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மாவட்டம் முழுவதும் 309 பேரும், 2வது நாளில் 138 பேரும், 3வது நாளில் 1213 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து 4வது நாளாக நேற்று மனுக்கள் பெறப்பட்டன. நேற்று ஒரேநாளில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 4 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 31 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 130 பேர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 666பேர் என மொத்தம் 831 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் இதுவரை, 2,481 பேரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 10 பேரும்  தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Tags : body elections ,
× RELATED 2023ம் ஆண்டு மே.வங்க உள்ளாட்சித்...