×

வட்டார கல்வி அலுவலருக்கு உயர்கல்விக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, டிச. 13:  ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர்கல்வி முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களை வட்டார கல்வி அலுவலர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் நிறைவு செய்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அதுபோல் ஆசிரியர் அஞ்சல் வழியில் உயர்கல்வி பயின்றால் துறை அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே உயர்கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் இருந்தது. இதில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள் தாங்கள் பயின்ற உயர்கல்விக்கு பின்னேற்பு பெற முடியாமல் இன்றளவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த குழப்பத்தை தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் வட்டார கல்வி அலுவலர்களே உயர் கல்வி பயில அனுமதி வழங்கலாம் என கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் 2018, மே.18ல் வெளியிடப்பட்ட அரசாணை 101ன் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பலன்களை அளிப்பது தவிர்த்து மற்ற அனைத்து அதிகாரங்களும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகமும் தேர்வு நிலை, சிறப்பு நிலை உயர்கல்வி அனுமதிக்கு தேவையற்ற காரணங்களை கூறி ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்களை திருப்பி விடுகின்றன. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தேவையற்ற கால தாமதமும் ஏற்படுகிறது. மேலும் உயர்கல்வியை தொடர்வதா என்ற குழப்பமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது, ‘ஏற்கனவே ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கோரும் கோப்புகள் மாத கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட கோப்புகளும் தாமதப்படுவதால் அலுவலகங்ளில் தேவையற்ற நிர்வாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்பு இருந்தது போல் தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர்கல்வி முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களை திரும்பவும் வட்டார கல்வி அலுவலர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். கல்வித்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாணை 100 மற்றும் 101ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : teachers ,Regional Education Officer ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்