மதுரை, டிச. 13: மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி (மதுரை), மீனாவதி (மேலூர்), இந்திரா (திருமங்கலம்), முத்தையா (உசிலம்பட்டி), மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் பேசும்போது, “தமிழக அரசின் 14 வகையான நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடைந்துள்ளதா என தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். “எமிஸ்” இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் விடுபட்ட விவரங்களை தாமதமின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வின்படி குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், மெல்லக்கற்கும் மாணவர்களை கண்டறிந்து அந்த மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சியளிக்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர்கள் கணினி இயக்குவது தொடர்பான பயிற்சிகளை பெற்று தாமதமின்றி பதிவேற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 140 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.