நத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை

நத்தம், டிச. 13: நத்தம் அருகே மலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வனத்துறை திடீர் தடை விதித்தது. இதை கண்டித்து சாலைமறியலுக்கு முயன்ற மக்கள், பின் பேச்சுவார்த்தை உடன்பாட்டால் கைவிட்டனர். நத்தம் அருகே சேத்தூர், குட்டுப்பட்டி பஞ்சாயத்துகளை சேர்ந்த கரந்தமலை உச்சியில் சின்னமலையூர், வலசை, பெரிய மலையூர், பள்ளத்துக்காடு போன்ற கிராமங்கள் உள்ளது. இவ்வூர்கள் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி மக்கள் நத்தம்- செந்துறை நெடுஞ்சாலையில் அய்யனார்புரம் மாணிக்கம் கடை பஸ்நிறுத்த பகுதிக்கு வந்து நத்தம் மற்றும் வெளியூர்களுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். கடந்த காலங்களில் அடிவாரத்திலிருந்து சுமைகளை தலையில் தூக்கி கொண்டும், குதிரையில் ஏற்றி கொண்டும் நடந்தே சென்று வந்தனர். மேலும் மருத்துவம், பிரசவம் போன்ற அவசர தேவைகளுக்கு டோலி கட்டி மலையிலிருந்து கீழே வந்து செல்வதுமாக சிரமப்பட்டு வந்தனர்.

காலப்போக்கில் வாகன பெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்தும், மலை உச்சி கிராமங்களில் கலைஞர் வீட்டு வசதி, பசுமை வீட்டு வசதி திட்டம், கிராமத்தில் பள்ளிகள் ஏற்படுத்துவது போன்றவைகளுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல நான்கு சக்கர வாகனங்களையும், மலை அடிவாரத்திற்கு வந்து செல்ல டூவீலர்களையும் பயன்படுத்துவது அதிகரித்தது. மேலும் இக்கிராமமக்கள் சாலை வசதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் காப்பு காடுகள் உள்ள இந்த மலைப்பகுதியில் வாகனங்கள் வருவதை வனத்துறை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தது. இந்நிலையில் நேற்று வனத்துறை சார்பில் மலை அடிவார பகுதியிலிருந்து நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சோதனை சாவடி அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நத்தம்- செந்துறை சாலையில் மறியல் செய்ய குவிந்தனர். இதையறிந்த நத்தம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வனசரகர் ஜெயசீலன், ரூரல் போலீஸ் டிஎஸ்பி வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களை திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு பின் கிராமமக்கள் கூறுகையில், ‘பகல் நேரங்களில் அத்தியாவசிய பொருட்களை நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லவும் மற்றும் கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்கும், அவசரகால மருத்துவ சிகிச்சைக்கும் வாகனங்களை பயன்படுத்த கோரிக்கை விடுத்தோம். இதனை வனத்துறையினர் ஏற்று கொண்டனர். இதனால் சாலைமறியலை கைவிட்டோம்’ என்றனர்.

Related Stories: