கந்து வட்டி கொடுமையால் கிராபிக்ஸ் டிசைனர் தற்கொலை முயற்சி

கும்பகோணம், டிச. 13: கும்பகோணம் அருகே கந்து வட்டி கொடுமையால் கிராபிக்ஸ் டிசைனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரகாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (41). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தயாமித்ரன் (10) என்ற மகன் உள்ளார். கும்பகோணம் பட்டம் சந்தில் உள்ள காம்பளக்சில் அலுவலகம் அமைத்து கிராபிக்ஸ் டிசைனிங் தொழிலில் பிரபாகரன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக 10க்கும் மேற்பட்டோரிடம் வட்டிக்கு ரூ.27 லட்சத்தை பிரபாகரன் வாங்கியுள்ளார். இதைதொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பிரபாகரன் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் சிறுநீரக கல் இருந்ததால் அதற்கும் சிகிச்சை பெற்று கொண்டதால் பிரபாகரன் தொடர்ந்து தனது தொழிலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கடன் வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக வட்டி பணத்தை பிரபாகரன் கொடுக்கவில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப கேட்டனர்.

சில நாட்களுக்கு முன் சிலர் வந்து உடனடியாக வட்டியுடன் அசலையும் சேர்த்து தராவிட்டால் வீட்டை இழுத்து பூட்டி விடுவேன் என்று மிரட்டி சென்றனர். அதன்பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு தரக்குறைவாக பேசியுள்ளனர். இதில் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் நேற்று காலை தனது அலுவலகத்துக்கு சென்று தனது நண்பரிடம் விரக்தியுடன் பேசியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் பிரபாகரன் செல்போனில் பேசவில்லையே என்று சந்தேகப்பட்ட நண்பர் மற்றொரு நண்பருடன் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அப்போது விஷம் குடித்து பிரபாகரன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையி–்ல் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் பிரபாகரன் மனைவி கீதா புகார் செய்தார். அதன்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: