கும்பகோணம், டிச. 13: கும்பகோணம் அருகே கந்து வட்டி கொடுமையால் கிராபிக்ஸ் டிசைனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரகாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (41). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தயாமித்ரன் (10) என்ற மகன் உள்ளார். கும்பகோணம் பட்டம் சந்தில் உள்ள காம்பளக்சில் அலுவலகம் அமைத்து கிராபிக்ஸ் டிசைனிங் தொழிலில் பிரபாகரன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக 10க்கும் மேற்பட்டோரிடம் வட்டிக்கு ரூ.27 லட்சத்தை பிரபாகரன் வாங்கியுள்ளார். இதைதொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பிரபாகரன் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் சிறுநீரக கல் இருந்ததால் அதற்கும் சிகிச்சை பெற்று கொண்டதால் பிரபாகரன் தொடர்ந்து தனது தொழிலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கடன் வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக வட்டி பணத்தை பிரபாகரன் கொடுக்கவில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப கேட்டனர்.