திருப்பூர்,டிச.13: திருப்பூர், மாநகராட்சிக்குட்பட்ட பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காலேஜ் ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தார் ரோடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சரி செய்யப்படுவதில்லை. சாலைகளை பழுது பார்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம், மறியல் என பல போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினால், பேட்ஜ் வொர்க் மட்டுமே செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் பேட்ஜ் வொர்க்கும் சிறிய மழைக்கு கூட தாங்காமல் பெயர்ந்து விடுகிறது. இத்தகைய குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதினாலும், இரவு நேரத்தில் குழியின் அருகில் மின் விளக்குகள் இல்லாததாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லக்குடிய பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலினால் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக அவசர நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இத்தகைய சாலைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.