ஊட்டி, டிச.13: ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அணை நிரம்பி வழிவதால், கோடையிலும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நான்கு மாதங்களாக கொட்டி தீர்த்தது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக கேத்தி பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வடகிழக்கு மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஊட்டி அருேகயுள்ள காட்டேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. தற்போது வரை அணையில் தண்ணீர் குறையாமல் உள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மருந்துகள் தயாரிக்கவும், இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை கோடையில் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.மேலும் அணைக்கு வரும் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், கோடை வரை அணையில் தண்ணீர் அளவு குறைய வாய்ப்பில்லை என்பதால் தொழிற்சாலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.