ஊட்டி, டிச.13: கேத்தி பாலாடா பகுதியில் தொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறிய பள்ளி மைதானத்தில் விளையாட முடியால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் பெய்த மழையால் அங்கு தாழ்வான விவசாய நிலங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் காட்டேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்திலும் தண்ணீர் தேங்கியது. மழை ஓய்ந்து பல நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல், மைதானம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், மாணவர்கள் விளையாடும்போது சிலர் தவறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த மைதானத்தை சீரமைக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.