கடையம், டிச. 13: கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரமான பெத்தான்பிள்ளை குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூர், பங்களா குடியிருப்பு, சிவசைலம், கடவாக்காடு, ஆம்பூர் ஆகிய பகுதிளில் உள்ள தோட்டங்களில் யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் சார்பில் பூங்கோதை எம்எல்ஏ, நேற்று கடையம் வனச்சரகர் நெல்லை நாயகத்திடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: யானைகள் கிராமத்திற்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை நிரந்தரமாக ஊருக்கு புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னைக்காக இழப்பீட்டு தொகையை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சிறுகிழங்கு பயிரை சேர்க்க வேண்டும். பயிர் சேத நிவாரணத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.