வந்தவாசி, டிச.13: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவர் வந்தவாசியில் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக மனைவி செல்வியிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர், வழக்கமாக செல்லும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு சென்றாராம். அங்கு கடையின் உரிமையாளரிடம், ‘மயக்கம் வருவதுபோல் உள்ளது சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்கிறேன்'''' என கூறிவிட்டு கடையின் ஓரம் படுத்திருந்தாராம்.
நீண்டநேரமாகியும் ஆறுமுகம் கண் விழிக்காததால், கடை உரிமையாளர் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, செல்வி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.