பள்ளிகொண்டா, டிச.13: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்டிஓ கணேஷ் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விழாவையொட்டி பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாலாற்றில் பக்தர்கள் குளிக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, பாலாற்றில் கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவற்றை அகற்றவும், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். கோயிலை சுற்றி கட்டப்பட்டிருந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்களிடம் தெரிவித்து உடனடியாக அப்புறப்படுத்த கூறினார். அப்போது, தாசில்தார் முரளிகுமார், பிடிஓ இமயவர்மன், ஆர்ஜ தேவிகலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், கோயில் செயல் அலுவலர் சசிக்குமார் உடன் இருந்தனர்.